நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள், அரசியல் துறையில் கொந்தளிப்பும், சமுதாய துறையில் கிளர்ச்சியும், பண்பாட்டுத்துறையில் மறுமலர்ச்சியும் காணப்பட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் பிறந்த அவர், அக்காலத்தே இந்தியாவில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்த சமுதாய, சமய சீர் திருத்தவாதிகளான இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சிவானந்த சரஸ்வதி, இரவிந்திரநாத் தாகூர், இராமகிருஷ்ண பரம ஹம்சர், சுவாமி விவேகானந்தர் முதலிய பெரியோர்களின் புரட்சி கருத்துக்களால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டார். அந்தக் கொள்கைகளில், அவர் நன்கு ஊரியதன் விளைவாக இந்தியப்பண்பாட்டின் மீது அவருக்கு தனிப்பற்று ஏற்பட்டது, குறிப்பாக, இளமை பருவத்திலிருந்தே தம் பெற்றோர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழ்பண்பாட்டின் மீது அவருக்கு ஆராகதல் வளர்ந்தது. காளைப்பருவத்தின் வாயிலில் அவர் அடிஎடுத்து வைக்கும் போதே, பíகிம் சந்திர சட்டர்ஜி என்ற அறிஞர் இயற்றிய "வந்தே மாதரம்" என்ற பாடல் அவரது உள்ளத்தில் தேசபக்தி கனலை மூட்டியது. உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த போதே அரவிந்தர், பால கங்காதர திலகர் போன்ற தீவிரவாதிகளின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அப்பெரியோர்களின் நூல்களை ஆர்வத்தோடு படித்தார்; அவர்களை வியந்து வியந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி கண்டார்; அவர்களது கருத்துக்களால் உந்தப்பட்டு இந்திய விடுதலையை ஒரு வன்முறை புரட்சியால் மட்டுமே பெறமுடியும் என்ற திடமான முடிவுக்கு வந்தார். ஆனால் பின்னாளில் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட அவர், அஹிம்சை ஒன்றினால் மட்டுமே இந்திய விடுதலையைப் பெற முடியும் என்ற திடமான முடிவுக்கு வந்தார். காந்தியடிகளை ஆர்வத்துடன் பின்பற்றி, அவரால் தொடங்கப்பட்ட தேசிய இயக்கங்கள் அனைத்திலும் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பங்குகொண்டார். அவரது நூல்களில் தேசியமும், காந்தியமும் பொங்கித் ததும்பலாயின. அதைக் கண்ட தமிழ்நாடு மக்கள் அவரைத் "தேசிய கவிஞர்" என்றும், "காந்திய கவிஞர்" என்றும் போற்றலாயினர். இவ்வாறு அவரது அரசியல் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த கோகலே, காந்தியடிகள் போன்ற மிதவாதிகளின் கொள்கைகளின் செல்வாக்குக்குப் பெரிதும் ஆட்பட்டனவாக உருவாயின.
சமுதாயம், பண்பாடு ஆகிய துறைகளில், அக்காலத்தே வங்காளத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருந்த மறுமலர்ச்சி இயக்கத்தின் செல்வாக்குக்கு அவர் ஆட்பட்டார். அதன் விளைவாக, குழந்தைத் திருமணம், சதி, சிசுக்கொலை, தீண்டாமை, வரதட்சனை கொடுமை போன்ற சமுதாய தீமைகளின்பால் அவருக்குக் கடுமையான வெறுப்பு ஏற்படலாயிற்று. விதவைகள் மறுமணம் செய்து கொள்வதையும், தீண்டாதார் கோயிலுக்குள் புகுவதையும், பல்வேறு சாதியினரும் தமக்குள் கலப்புமணம் செய்து கொள்வதையும், ஒரே பந்தியில் பல சாதியினரும் சமமாக அமர்ந்து உணவருந்துவதையும் அவர் தீவிரமாக ஆதரிக்கலானர். காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களான மதுவிலக்கு, கிராம முன்னேற்றம், கதர் உற்பத்தி முதலியவைகளைப் பெரிதும் போற்றி பேசுவதிலும், எழுதுவதிலும் அவர் தீவிர முனைப்புடன் ஈடுபடலானார். வட இந்தியாவில் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், தமிழ் நாட்டில் வடலூர் இராமலிங்க சுவாமிகளும் எடுத்துரைத்த சர்வ சமய சன்மார்க்கக் கொள்கைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இவ்வாறு அக்காலத்தே நாட்டில் உலவிய சீர்திருத்த கருத்துக்களும், மறுமலர்ச்சிக் கோட்பாடுகளும் அவரது சமுதாய, அரசியல் கொள்கைகளை உருவாக்குவதில் பெரிதும் துணைபுரிந்தன.
இலக்கிய துறையில் அவர் அக்காலத்து வங்காள எழுத்தாளர்களைப் பின்பற்றி, சராசரி தமிழ் மகனுக்கும் புரிகிற வகையில், எளிய தமிழில் புதினங்களையும், சிறுகதைகளையும் ஏராளமாக எழுதலானர். அவரது கவிதைகள் எளிய தெளிவான நடையில் புனையப்பட்டதால் , படிக்காத பாமர மக்கள்கூட அவற்றை எளிதில் பாடவும், அவற்றில் பொதிந்து கிடக்கும் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. இத்துறையில் தமிழ்நாட்டில் அன்று புகழ் பெற்று விளங்கிய மறுமலர்ச்சிக் கவிஞர்களான சுப்ரமணிய பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோர்களின் அடிச்சுவடுகளையே அவரும் பின்பற்றினார். தமிழ்நாட்டின் தலைசிறந்த தேசிய கவிஞராக விளங்கிய சுப்பிரமணிய பாரதியாரின் மறைவுக்குப்பின், தமிழில் எளிய நடையில் கவிதைகளையும், உரைநடை நூல்களையும் எழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்தவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்களேயாவார். மற்றும் தற்கால புலவர்களான இராமலிங்க சுவாமிகளும், தாயுமானவ சுவாமிகளும், இடைக்கால புலவர்களான கம்பன், புகழேந்தி ஆகியோரும், அவரது மனத்தில் ஆழ்ந்த முத்திரையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதையும் அவரது கவிதைகளைப் படிப்போர் எவரும் தெள்ளிதின் உணர்ந்து கொள்ள முடியும்.
அவர் வாழ்ந்த காலம் தமிழகத்தின் பிரிவினை வாதங்களும், குறுகிய வட்டார உணர்ச்சிகளும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த ஒரு காலமாகும். உண்மையில், அவர் ஆரோக்கியமானதொரு வட்டாரப் பற்றையும் உள்ளூர் உணர்ச்சியையும் உளமார ஆதரித்தாரென்று கூறலாம். ஆனால் அத்தகைய பற்று ஒரு வெறியாக மாறி பிரிவினை வாதத்துக்குத் தூபம் போடுவதாக அமைவதைத்தான் அவர் முற்றிலும் வெறுத்துக் கண்டித்தார். நாட்டை பிரித்து சின்னா பின்னமாக்கக்கூடிய எந்தக்கொள்கையிலும் அவருக்கு சிறிதும் உடன்பாடில்லை. வலிமைமிக்க ஓர் ஒன்றுபட்ட இந்தியாவே அவரது கண்முன் என்றும் காட்சியளித்துக்கொண்டிருந்தது.
இவ்வாறு வெ. இராமலிங்கம் பிள்ளையவர்கள் ஓரளவு காலத்தின் கோலத்துக்குக் கட்டுப்பட்டவராக 19, 20 ஆம் நூற்றாண்டுப் புரட்சிக் கருத்துக்களின் செல்வாக்குக்கு உட்பட்டவராக வாழ்ந்தார். எனினும், ஒரு வகையில் அவர் ஒரு பழமைவாதியாகவும் திகழ்ந்தார். அவரது சிந்தனைகளும் செயல்களும் பண்டைய இந்தியப்பண்பாட்டிலும், தமிழ் பண்பாட்டிலும் ஆழமாக வேரூன்றி நிலை பெற்றிருந்தன.